தமிழர் இயக்கத்தின் அனைத்துலக தொடர்பாளர், மனித உரிமைச்செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ், சதுரங்கம் நிகழ்ச்சியில்….

ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு பாராளுமன்றங்கள் போன்ற பன்னாட்டு இராசதந்திர தளங்களில் கடந்த 22 வருடங்களாக தமிழர் உரிமைச் செயற்பாடுகளை மாத்திரமல்லாது எம்மைப் போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் நீதிக்காகவும் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்.

மாணவனாக இருந்த காலத்தில் இருந்து வேற்று இன இளைஞர்களையும் உள்வாங்கி ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் என பன்னாட்டு அரசியல் தளங்களில் தமிழர்களின் நீதிக்கான இராசதந்திர போராட்டத்தினை தொடங்கிய காலத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்று பல பட்டங்கள் பெற்று பல ஆயிரம் யூரோக்கள் சம்பளம் கிடைத்த யுனெஸ்கோ ( UNESCO ) பணி கிடைத்த போதும் அச் சம்பளத் தொகையை முற்றாகவே தமிழர்களின் உரிமைச் செயற்பாடுகளுக்காக எடுத்துக்கொண்டு செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருந்த போது யுனெஸ்கோ ( UNESCO ) பணியில் இருந்து கொண்டு உரிமைச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்ற நிலை வந்தபோது பல ஆயிரம் யூரோக்கள் சம்பளம் கிடைத்த அப்பணியை தூக்கி எறிந்துவிட்டு முற்று முழுதாகவே தமிழர் உரிமைச் செயற்பாடுகளை முன்னெடுக்க தொடங்கினார்.

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு அரசியல் தளங்களில் உள்ளே சென்று செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமாகவே உள்ளே செல்ல முடியும். தமிழர்களுக்கென சொந்தமாக அமைப்புக்களை உருவாக்க வேண்டுமென முடிவெடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

பொஸ்கோ அவர்கள் தன்னுடைய அறிவினால் அவற்றையெல்லாம் மேவி சாதாரணமாக அனைவரும் சென்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இலகுவாக்கினார். குறிப்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் நேரடியாகவே அத்தளங்களில் சென்று தமக்கு நேர்ந்த பாதிப்பிற்கு நீதி கேட்கும் வகையில் வழியேற்படுத்தப்பட்டது.

மேலும் இவரது சாதனைகளாக தமிழரின் பிரச்சினைகள் குறித்து இதுவரை ஐ.நா வில் இவரது ஒருங்கிணைப்பில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களின் ஊடாக 300 இற்கும் மேற்பட்ட எழுத்துமூல அறிக்கைகளும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் 1300 இற்கும் மேற்பட்ட வாய்மூல அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 800 தடவைகளுக்கு மேல் தமிழர்கள் மீது பேரினவாத சிறீலங்கா அரசு மேற்கொண்டது திட்டமிட்ட தமிழின அழிப்பு எனவும் அதற்கு பன்னாட்டு நீதிவிசாராணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறப்பட்டது.அத்துடன் தமிழின அழிப்பு என்ற வார்த்தையை ஐ.நா வில் பயன்படுத்த முடியாது என பலதடவை தடைவிதித்து தமிழ் அமைப்புக்களையும் முடக்கி பல்வேறு விசாரணைகளை எதிர்கொண்ட போதெல்லாம் மனம் தளராது அதனை எதிர்த்து போராடி அவ் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து இன்றுவரை ஐ.நா விற்குள் தமிழர்கள் தமிழின அழிப்பு என்று உச்சரிப்பதற்கு பிரதான காரணமாக இவரே இருக்கிறார்.

அதுமட்டுமல்லாது தமிழின விடுதலைப் போராட்டத்தினை எந்தவொரு நாடும் ஏன் எந்த ஒரு அரசார்பற்ற அமைப்பும் கூட அங்கீகரிக்காமல் இருந்த சூழலில் அதனை மாற்றியமைத்து ஈழத் தமிழர் வரலாற்றில் முதன் முறையாக 2018 வருடம் ஐ.நா வின் அங்கீகாரம் பெற்ற ( ECOSOC ) 118 அமைப்புக்களும் உலகளாவிய ரீதியில் 3000 பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் இடம்பெற்றது திட்டமிட்ட இன அழிப்பு எனவும் அதற்கு சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் எனவும் தமிமீழ மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்க வலியுறுத்தியும் மற்றும் இலங்கையின் வடமாகாண சபை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரியும் இரு அறிக்கைகள் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்டது. இது ஈழத்தமிழரின் இனவிடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

மேலும் இவரது முயற்சியினால் பரகுவே பாராளுமன்றம், கத்தலோனியா பாராளுமன்றம், பார்சிலோனா நகரசபை மற்றும் பிரான்சு நாட்டின் சுவாசிலோகா நகரசபை போன்றவற்றில் தமிழின அழிப்பினை அங்கீகரித்தும் அதற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணர் உரிமையினை அங்கீகரித்தும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் இவரினால் முயற்சியினாலேயே சாத்தியமானது. அத்துடன் இவரது ஒருங்கிணைப்பிலான செயற்பாடுகளினால் இதுவரை 38 நாட்டு பாராளுமன்றங்கள் தமிழர் தரப்பிற்கான அழைப்பினை விடுத்துள்ளன

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top