வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
“வேணுகோபாலின் படைப்புகள் யதார்த்தவாத அழகியலுக்குள் வருபவை. யதார்த்தவாத அழகியல் உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. இயல்புவாதத்திற்கும் இதுவே இலக்கணம் என்றாலும், யதார்த்தவாத கதைகளில் ஒரு மறைமுக ஆசிரிய குரல் நன்மை தீமைகளுக்கான ஒரு தேர்வை நிகழ்த்துகிறது. உதாரணமாக வெண்ணிலை கதையில், அநாதரவாக சாலையில் நிற்கும் ஒருபதின் வயது பெண்ணை, பாலியல் தொழிலாளியாக நினைத்து நெருங்கும் இரு இளைஞர்கள், அவள் தன் தந்தையின் இறந்து போன உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல யாருமே தெரியாத ஊரில் உதவி செய்யக் கூடிய ஆட்களை தேடி நிற்கிறாள் என்று அறிந்து கொள்கின்றனர். அதன் பின் அந்த பெண் மீதும் அவள் குடும்பம் மீதும் அந்த இளைஞர்கள் கொள்ளும் பரிவு மூலமும் குற்ற உணர்ச்சி மூலமும் அந்த கதையின் உணர்ச்சி உருவாகி வருகிறது. அவர்கள் மூலமாக அதை உருவாக்குவது ஆசிரியரின் குரல் தான். ஆனால் இயல்புவாத படைப்புகளிலோ வெறும் புற உலக சித்தரிப்புகள் மூலமாக கதை முன்னகர்த்தப்பட்டு ஆசிரியர் குரல் என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறது. இந்த இயல்புவாத அழகியலே தீமையை சித்தரிப்பதற்கான சரியான வடிவமுமாக இருக்கிறது என்று ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் குறிப்பிட்டுள்ளார்.”
