அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல் சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.
அங்கஜன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு புனித தோமையர் ஆரம்பப் பாடசாலை, கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும், பின்னர் சிங்கப்பூரிலும் படித்தார்.வர் ஆத்திரேலியாவில் கணினிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.
அங்கஜன் பிரசாந்தினி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது.
அரசியலில்
இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர். இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை. 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.2018 சூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.
அங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.] இவர் தனது தேர்தல் பரப்புரைகளுக்கு முகநூல் விளம்பரங்களுக்காக US$15,000 (ரூ.2.7 மில்லியன்) செலவழித்ததாகவும், இவரது மாமனார் எஸ். வின்சேந்திரராஜனின் கெப்பிட்டல் எஃப்.எம் வானொலி ஊடாகப் பெரும் பரப்புரைகளிலும் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டது.
தேர்தல் வெற்றியில் பின்னர் அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.அங்கஜன் இப்பதவியைக் கையேற்ற முதலாவது நாள் “மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தனது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனது பிரதிநிதியாகவும், மாவட்ட அபிவிருத்திப் பேரவையின் அதிகாரியாகத் தனது தந்தையை நியமித்தார். 2020 ஆகத்து 20 இல் புதிய நாடாளுமன்றம் கூடியபோது அங்கஜன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
